அடையாள அட்டையைக் காட்டினால் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என போலீஸாருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் அறிவுறுத்தல்...
தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது,
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தீவிர சோதனையில் ஈடுபடுமாறு தமிழக அரசு வலியுறுத்தியதன் பேரில் இதுவரை இல்லாத அளவுக்கு போலீஸார் கடுமையான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதிப்பது, இ-பாஸ் இல்லாமல் வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வது என கெடுபிடி காட்டுகின்றனர்,
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள்,செவிலியர்கள், அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் சில இடங்களில் பத்திரிகையாளர்களை கீழ்நிலை போலீஸார் அனுமதிப்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன. அடையாள அட்டையை காட்டினாலும் போலீஸார் இ-பாஸ் கேட்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் அடையாள அட்டையைக் காட்டினால் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் பத்திரிகையாளர்கள் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை காட்டும்பட்சத்தில் அவர்களை வாகனங்களில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பா.ரவி
சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி.
No comments:
Post a Comment